games

img

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு  

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் அதற்காக தயாராகி ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் அங்கு கொரோனா தொற்று தீவிரமடைந்த வந்த நிலையில், சீன ஒலிம்பிக் கமிட்டி, ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டு குழு ஆகியவற்றுடன் ஆலோசிக்கப்பட்டு, காலவரையின்றி ஒத்திவைத்து, புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்தது. மேலும் போட்டிக்கான பெயர் மற்றும் அதன் லச்சினை மாறாது என தெரிவித்திருந்தது.  

இந்நிலையில், தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.  

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்த அடுத்த 10 மாதங்களில் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.  

முன்னதாக, ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி, 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.